மணிலா, ஜனவரி 26
தென் பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பயணிகள் கப்பல் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 15 ஆக உயர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 316 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்னும் 28 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
திங்கட்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. “எம்.வி. திரிஷா கெர்ஸ்டின் 3” என்ற பயணிகள் கப்பல், சாம்போஆங்கா துறைமுகத்திலிருந்து சுலு மாகாணத்தின் ஜோலோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது கடலில் விபத்துக்குள்ளானது.
கப்பலில் மொத்தம் 332 பயணிகளும் 27 பணியாளர்களும் இருந்ததாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் அனுமதிக்கப்பட்ட 352 பயணிகள் கொள்ளளவுக்குள் இயங்கியதாகவும் அதிகாரிகள் விளக்கினர்.

விபத்து நடந்த பகுதியில் கடல் நிலை அமைதியாக இருந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டதாக தென் மிந்தனாவ் கடலோர காவல் பிரிவு தளபதி ரோமெல் டுவா தெரிவித்தார். ராணுவ விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, பாசிலான் தீவு மாகாண ஆளுநர் முஜிவ் ஹடமான், மிந்தனாவின் இசபெலா துறைமுகத்தில் மீட்கப்பட்ட பயணிகள் கரை ஏறும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்தக் காட்சிகளில் சிலர் வெப்ப போர்வைகளில் போர்த்தப்பட்டும், சிலர் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டும் காணப்பட்டனர்.
பெரும்பாலான மீட்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாகவும், வயதான சில பயணிகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஹடமான் தெரிவித்தார். பயணிகள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸில் கடல் போக்குவரத்து முக்கியமான பயண வழியாக உள்ளது. இருப்பினும், கடல் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஆண்டுதோறும் பல பயணிகள் கப்பல் விபத்துகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.