14 மார்ச் 2026, அருண் கார்த்திக் ரா
கடந்த வாரம் அவர் கூறியது என்னவென்றால், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிட மறுத்ததாலும், நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்கி அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று. ஆனால் அதற்கு அடுத்த நாளில், அமெரிக்க நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி வேறு விளக்கத்தை அளித்தார். அவரின் கூற்றுப்படி, ஈரானும் அதன் ஆதரவு அமைப்புகளும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினருக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் உடனடி அச்சுறுத்தலாக இருந்ததால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, அமெரிக்க பாராளுமன்றத்தின் ஸ்பீக்கர் மைக் ஜான்சன் மற்றும் வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, இஸ்ரேல் ஈரானை தாக்கும் வாய்ப்பு இருந்ததால், அதற்கு முன்பே அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக கூறினர்.

ஆனால் மறுநாள் டிரம்ப் இந்த விளக்கத்தையும் மறுத்தார். “இஸ்ரேல் தாக்க வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தியிருக்கலாம்; ஏனெனில் நாம் தாக்கவில்லை என்றால் ஈரான் தான் முதலில் தாக்கியிருக்கும்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்வாறான முரண்பட்ட விளக்கங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. சில மாதங்களுக்கு முன் டிரம்ப் தான், “ஈரானின் அணு வசதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன” என்று கூறியிருந்தார். அப்படியிருந்தால் மீண்டும் அவற்றை தாக்க வேண்டிய அவசியம் என்ன?
மேலும், அமெரிக்க Defence Intelligence Agency 2025-ஆம் ஆண்டு வெளியிட்ட மதிப்பீட்டில், ஈரானின் ஏவுகணை திட்டம் அமெரிக்க நிலப்பரப்பை நேரடியாக தாக்கும் திறன் பெற இன்னும் ஒரு பத்து வருட காலம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது உடனடி அச்சுறுத்தல் இல்லை என்பதே அந்த அறிக்கையின் கருத்து.
இஸ்ரேலை காரணமாக காட்டிய விளக்கமும் கேள்விக்குறியாகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் உறவில் மூத்த நட்பு நாடு அமெரிக்காதான். டிரம்ப் விரும்பியிருந்தால், இஸ்ரேலை தாக்குதல் இருந்து தடுக்க முடிந்திருக்குமே என்பதே பலரின் கருத்து.
ஆனால் அதற்கு பதிலாக, இராக் போர் காலத்திற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவில் அமெரிக்க விமானப்படையை திரட்ட டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்மேலும், New York Times வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் CIA அமைப்பு, ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனையை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உளவுத்தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் நடைபெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அடிப்படையில் பார்க்கும்போது, உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க அதிபர் எடுத்த முடிவின் பொறுப்பு அவர்மீதே இருக்கிறது.
இந்நிலையில், டிரம்பின் குடும்பத்துடன் தொடர்புடைய நிதி விவகாரங்களும் மீண்டும் சர்வதேச அரசியல் விவாதத்தில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, அவரது மருமகனும் முன்னாள் ஆலோசகருமான Jared Kushner தலைமையிலான முதலீட்டு நிறுவனம், Saudi Arabia அரசின் செல்வ நிதியிலிருந்து சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை பெற்றதாக முன்பு வெளியான தகவல்கள் அரசியல் விமர்சனங்களுக்கு வழிவகுத்திருந்தன.

இந்த முதலீடு குறித்து அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நட்பு நாடுகள் உள்ள உறவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவையென சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்த முதலீடு தனிப்பட்ட முதலீட்டு நடவடிக்கையாகவே இடம்பெற்றது என்றும், அரசியல் முடிவுகளுடன் நேரடி தொடர்பு இல்லை என்றும் அந்த நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் டிரம்பிடம் புதிதல்ல. 1980-ஆம் ஆண்டிலேயே, ஈரான் பிடித்திருந்த அமெரிக்க கைதிகள் விவகாரம் குறித்து பேசியபோது, “அமெரிக்கா நேரடியாக படைகளை அனுப்பியிருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
1987-ல் அவர், “அமெரிக்காவை ஈரான் மிரட்டுகிறது; அதற்கு பதிலாக அமெரிக்கா ஈரானின் எண்ணெய் களங்களை கைப்பற்ற வேண்டும்” என்றும் பேசியதாக அந்நேர செய்திகளில் வெளியாகியது.1988-இலும், “ஈரான் அமெரிக்காவை மனப்போரில் தோற்கடிக்க முயல்கிறது; அதற்கு கடுமையாக பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதனால், ஈரானுக்கு எதிராக ராணுவ சக்தியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் டிரம்பின் அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாகவே இருந்தது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்து.
மேலும், டிரம்ப் முன்னர் இராக் போர் மற்றும் லிபியா தலையீட்டை ஆதரித்திருந்தார். தனது முதல் ஆட்சிக்காலத்தில், ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர் உத்தரவிட்டார்.
இரண்டாவது ஆட்சிக்காலத்தில், மத்திய கிழக்குக்கு ஆயுத விற்பனையை வேகப்படுத்துதல், கனடாவை மிரட்டுதல், கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் என்ற கருத்து போன்ற பல கடுமையான நிலைப்பாடுகளையும் அவர் எடுத்துள்ளார்.

இதனால், டிரம்ப் ஒரு “அமைதிக்கான அதிபர்” என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டாலும், அவரது கடந்த கால பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அது உண்மையா என்ற கேள்வி எழுகிறது.
CNN நிருபர் ஆண்ட்ரூ காசின்ஸ்கி கூறுவது போல, “டிரம்ப் போருக்கு எதிராக இருந்தார் என்று சொல்லப்படுவது ஒரு தவறான புரிதல். பல போர்களை அவர் ஆரம்பத்தில் ஆதரித்தார்; அவை தோல்வியடைந்த பிறகே எதிர்த்தார்” என்பதே இந்த விவகாரத்தின் முக்கியமான பின்னணி.