ஜனவரி 3, 2026 | வெள்ளிக்கிழமை: வெனிசுவேலா தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை தொடர் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவங்கள், நாட்டில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
கராகஸிலிருந்து வெளியாகியுள்ள காணொளிகளில், இடைவிடாது வெடிப்புச் சத்தங்கள் கேட்கும் நிலையில், ஹெலிகாப்டர்கள் வானில் பறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதல்களின் பின்னணியில் நகரின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகளை அமெரிக்காவின் நேரடி தலையீடாக குற்றம்சாட்டிய நிக்கோலஸ் மதுரோ, இது வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நாடு முழுவதும் தேசிய அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், வெனிசுவேலா மீது அமெரிக்கா பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும், அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டு நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. வெனிசுவேலா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள், சர்வதேச எதிர்வினைகள் மற்றும் கள நிலவரம் குறித்த மேலதிக தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும்